சென்னை- பெங்களூர் 'டபுள் டெக்கர்' ரயில்.. நாளை மறுநாள் முதல்... !
சென்னை: சென்னை- பெங்களூர் இடையேயான டபுள் டெக்கர் ரயில் நாளை மறுநாள் முதல் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சென்னை சென்ட்ரல்- பெங்களூர் இடையேயான டபுள் டெக்கர் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் இரு மார்க்கத்தில் இருந்தும் தொடங்கவுள்ளது.
காலை 7.25 சென்னை, பகல் 1.30 பெங்களூர்...
சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும்.
சதாப்தியை விட ஸ்பீடு கம்மி...
அதாவது இரு நகரங்களுக்கும் இடையே உள்ள சுமார் 360 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 6 மணி நேரத்தில் கடக்கவுள்ளது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தான் 5 மணி நேரத்தில் இந்த தூரத்தைக் கடக்கிறது.
நிற்கும் இடங்கள்...
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்கார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூர் கன்டோன்மன்ட்டில் நின்று செல்லும்.
பெங்களூரில் இருந்து சென்னை செல்லும்போது மட்டும் இந்த ரயில் ஆம்பூரிலும் நிற்கும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது.
ரூ. 470 கட்டணம்...
சென்னை சென்ட்ரல்- பெங்களூர் ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ. 470 ஆகும். சென்னை-பெங்களூர் இடையே இயங்கும் பிருந்தாவன், லால்பாக், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேர் கார் கட்டணமும் ரூ. 470 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
ஜிபிஎஸ் வசதி, டிஜிட்டல் போர்ட் அறிவிப்புகள்..
ஜிபிஎஸ் வசதி கொண்ட இந்த ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் ரயில் எங்கே சென்று கொண்டிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செல்கிறது, அடுத்த ஸ்டேசன் எது போன்ற விவரங்கள் டிஜிட்டல் போர்டுகளில் லைவ் ஆக ரிலே ஆகும்.