மதுரை ரயில் நிலையத்தில் சிக்னல் பழுது.. வழியிலேயே நிறுத்தப்பட்ட ரயில்கள்- தவித்த மக்கள்
மதுரை: ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்து ரயில்கள் வராததால் மதுரை ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
மதுரை வழியாக சென்னை செல்லும் ரயில்கள் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இரவு 7 மணி அளவில் இந்த பிளாபாரத்தின் சிக்னல் இயங்கவில்லை. இதனால், மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஜம்முதாவி ரயில் ஆண்டாள்புரம் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதே போல ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வந்த ரயிலும், தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் யார்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ரயில்கள் வராததால் ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் காணப்பட்டது. பயணிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சிக்னல் விவகாரம் குறித்த அறிவிப்பையும் ரயில் நிலைய அதிகாரிகள் வெளியிடாததால் நேற்றிரவு மதுரை ரயில் நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவியது.
பொறியாளர்கள் சிக்னலை சரி செய்தபின் இரவு 8.45 மணிக்குத் தான் ஒவ்வொரு ரயிலாக மதுரை ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. இந்த ரயில்கள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.