கனடாவில் ரயிலை கவிழ்க்க அல்-கொய்தா சதி: அமெரிக்க உதவியுடன் 2 பேர் கைது!
இது குறித்து டொரண்டோவில் நிருபர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரியான ஜேம்ஸ் மலிஷியா கூறுகையில்,
சிகப் எஸஹெர் (35), ரெயிட் ஜாசர் (30) ஆகிய இருவரும் கனடாவின் வயா ரயில் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சில காலமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
டொரண்டோவில் இந்த ரயில் நிறுவனத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர்.
இவர்களுக்கு ஈரானில் உள்ள அல்-கொய்தா அமைப்பினரிடம் இருந்து உத்தரவுகள் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தச் சதித் திட்டத்தில் ஈரான் அரசுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
கைது செய்யப்பட்ட இருவரும் கனடா பிரஜைகள் அல்ல. அவர்கள் எந்த நாட்டினர் என்பதை இப்போது வெளியிட இயலாது.
இந்த இருவரும் ரயிலைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை சில காலத்துக்கு முன்பே தெரிந்து கொண்டு இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்தோம் என்றார்.
ஆனால், இவர்கள் எந்த ரயிலைக் கவிழ்க்க முயன்றனர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
வயா ரயில் நிறுவனம் கனடா அரசுக்கு சொந்தமானதாகும். இந்த ரயில் நிறுவனம் அம்ட்ராக் ரயில் நிறுவனத்துடன் இணைந்து டொரண்டோவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் பென் ஸ்டேசனுக்கும் ஒரு ரயிலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிகப் எஸஹெர் கனடாவின் க்யூபெக் நகரில் உள்ள ஷெர்ப்ரூக் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இப்போது மாண்ட்ரியலில் உள்ள Institut National de la Recherche Scientifique மையத்தில் உயிரியல் படித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த இருவரையும் கண்காணிப்பதிலும் கைது செய்வதிலும் அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பும் கனடா போலீசாருக்கு உதவியுள்ளது. இரு நாடுகளின் உளவுப் பிரிவுகளும் இணைந்தே இவர்களைப் பிடித்ததாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா சன்னி பிரிவைச் சேர்ந்தது. அவர்களை ஷியா ஆதிக்கம் கொண்ட ஈரான் எந்தக் காலத்திலும் ஆதரித்ததில்லை. அப்படியிருக்கையில் ஈரானில் எப்படி அல்-கொய்தா இயக்கத்தினர் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஜேம்ஸ் மலிஷியா பதிலளிக்கவில்லை.
கடந்த மாதம் கனடாவைச் சேர்ந்த இருவர் அல்ஜீரியாவில் ஒரு எரிவாயு ஆலையின் மீது நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் பலியானது குறிப்பிடத்தக்கது.
அதே போல கடந்த 2006ம் ஆண்டு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி டொரண்டோவில் 18 பேரை கனடா கைது செய்தது. இதில் 11 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. 7 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.