பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகுவதால் இந்தியாவில் வணிக சூழல் பாதிப்பு அபாயம்!
டெல்லி: பெருநகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்தியாவில் வணிக சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தொழில் வர்த்தக அமைப்பான அசோசெம் அமைப்பு, டெல்லி சிறுமி கற்பழிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பெரு நகரங்களில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பெண் ஊழியர்களை சூரியன் மறைந்த பின் வேலைக்கு வைக்க நிறுவனங்கள் அஞ்சுகின்றன. பல துறைகளில் பல வேலைகளில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இந்த சம்பவங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் பெண்கள் இந்தியாவின் தலைநகருக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் சூழலுக்கு இட்டுச் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து அசோசெம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில், 'இது போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெறும்போது மக்கள் தான் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் இதற்கு பொறுப்பேற்பதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டு இந்த சூழ்நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருகின்றனர்' என்றார்.