பெங்களூர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் மேலும் 32 'அனாதை' கார்- பைக்குகள் பறிமுதல்
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று நின்ற மேலும் 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் சென்னையில் தொடர்ச்சியாக வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொது இடங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இச் சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 29 கார் டிரைவர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 83 பேர், 7 ஆட்டோ டிரைவர்கள் உள்பட 124 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதேபோல பொது இடங்களில் கேட்பாரற்று நின்ற 13 கார், 15 மோட்டார் சைக்கிள்கள், 4 ஆட்டோக்கள் என மொத்தம் 32 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றை ஆவணங்கள் மூலம் விசாரணை செய்து அவர்களின் உரிமையாளர்களிடம் 15 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. மீதியுள்ள 17 வாகனங்கள் அந்தந்த பகுதி குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.