தர்மபுரி கலவரம்: பாதிக்கப்பட்ட தலித்களுக்கு தங்குமிடம், உடைகள், பஸ்கள்.. ஜெயலலிதா
சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது:
தருமபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் (ஆதிதிராவிடர்) என்பவர் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜன் (வன்னியர்) என்பவரது மகள் திவ்யாவை காதலித்து, 8.10.2012 அன்று திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர்கள் 15.10.2012 அன்று சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் முன்பு சரணடைந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தபோது, திவ்யாவின் பெற்றோர்கள் விசாரணைக்கு வரவில்லை. இத்திருமணத்தை எதிர்த்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், நாயக்கன்கொட்டாயில் கூட்டம் நடத்தி, காலனியைச் சேர்ந்த பெரியவர்களிடம் திவ்யாவை அவரது பெற்றோரிடம் அனுப்பி வைக்க வேண்டுமென வற்புறுத்தினர்.
தூக்கு போட்டு தற்கொலை:
ஆனால், திவ்யா அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நாயக்கன்கொட்டாயில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறாவண்ணம், 6.11.2012 அன்று காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், திவ்யாவின் திருமணத்தால் மனமுடைந்த அவரது தந்தை நாகராஜ் 7.11.2012 அன்று அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வன்னியர்கள் நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதுடன், தீயிட்டும் கொளுத்தினர். வன்னியர்களில் ஒரு பிரிவினர் நாகராஜின் உடலை நாயக்கன்கொட்டாயில் தருமபுரி- திருப்பத்தூர் பிரதான சாலையில் வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்தவுடன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் ஆகியோரும் போதுமான காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான காவல் பாதுகாப்பு அளித்து, மேலும் அப்பகுதியில் சம்பவங்கள் ஏதும் நடவாமல் பார்த்துக் கொண்டனர்.