For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருக்குறளுக்கு விளக்கம் தரும் புதுக்குறள்: தூத்துக்குடி என்ஜினியரின் புது முயற்சி

By Siva
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றி அறியாதவர்கள் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது என்று கூறும் நேரத்தில் திருக்குறளுக்கு அதே வரிசையில் குறள் வடிவில் விளக்கம் தந்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் உச்சிமாகாளிதுரை.

பொதுவாக திருக்குறளுக்கு உரைநடை வடிவிலேயே விளக்கம் எழுதியுள்ளனர் தமிழ் அறிஞர்கள். ஆனால் மரபு இலக்கணத்தில் குறள் வடிவிலேயே 7 எழுத்துக்கள் வரிசையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இதுவரை யாரும் திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்ததில்லை.

உரைநடை வடிவிலான விளக்கத்தை படித்து விளக்கம் பெற முடியாதவர்கள் கூட, குறள் வடிவான விளக்கத்தை எளிதில் புரிந்து கொள்கின்றனர். அந்தளவிற்கு அதனை வடிவமைத்துள்ளார் தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் உச்சிமாகாளிதுரை.

இது தொடர்பாக அவர் நம்மிடம் கூறியதாவது,

நான் படிக்கும்போது தமிழ் பாடத்தில் வரும் செய்யுள், இலக்கணத்தை அர்த்தம் அறிந்து படித்தது இல்லை. ஏதோ தமிழில் பாஸ் ஆக வேண்டும் என்பதற்காகவே படித்தேன். எனது தந்தை கட்டுமான பணி மேற்கொண்டு வந்ததால் நான் பொறியாளருக்கு படித்து கட்டுமான தொழிலை மேற்கொண்டுள்ளேன்.

Kural style explanation for Valluvar's Kural: Tuticorin engineer's attempt

நான், எனது பணி தேவைக்காக இமெயில் சேவையை பயன்படுத்த ஆரம்பித்தேன். அப்போது முதல் முதலாக ஒரு தமிழ் இணையதளத்தில் புதுக்கவிதை ஒன்றை வெளியிட்டேன். இதனைக் கண்ட தமிழ் அறிஞர் ஒருவர் என்னை மிகவும் கண்டித்தார். நீ எழுதியது கவிதையே இல்லை, பப்ளிக் பாத்ரூமில் கிறுக்குவது எல்லாம் கவிதையாகாது என்றெல்லாம் சாடினார்.

இதனைக் கேட்ட நான் அவரிடம் ''அப்படியெனில் கவிதை எழுதுவது எப்படி என்று எனக்கு சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டேன். அதுக்கு அவரோ அது உடம்புல இருக்கிற உயிர்போல ஆரம்பத்திலே இருந்தே வரணும், இடையிலே வந்தெல்லாம் சொருக முடியாது'' என்று கூறிவிட்டார். இருந்தாலும் நான் விடவில்லை, இன்னும் இரண்டே மாதத்திலே நான் மரபுக்கவிதை எழுதிக் காட்டுறேன், அதுமட்டுமல்ல ஒரு வருடத்திற்குள் நீங்களே பாராட்டுற மாதிரி தமிழ் இலக்கியத்தில் சாதித்து காட்டுகிறேன் என்று சவால் விட்டேன்.

அதற்கேற்ப புத்தக கடைகள், நூலகங்களுக்கு சென்று தமிழ் இலக்கிய புத்தகங்களை எல்லாம் வாங்கி படித்து இலக்கியம் கற்று மரபுக்கவிதை எழுதினேன். இருந்தாலும் என்னுடைய கவிதையை பாராட்டும் மனநிலையில் அவர் இல்லை. அதனால் எல்லோரும் பாராட்டுற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்பொழுது தான் திருக்குறள் புத்தகம் கண்ணில் பட ஒரு ஐடியா தோன்றியது. அதுவே திருக்குறளுக்கு குறள் வடிவிலே விளக்கம் எழுத காரணமாக அமைந்துவிட்டது.

திருக்குறளுக்கு விளக்கம் எழுதிய தமிழ் அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படித்தேன். பகல், இரவு பார்க்காது கடுமையாக முயற்சி செய்து திருக்குறளுக்கு குறள் வடிவிலேயே விளக்கம் எழுத ஆரம்பித்தேன். 4 மாத முடிவிலே அனைத்து குறளுக்கும் குறள் வடிவிலே விளக்கம் எழுதி முடித்தேன். இதைப்பார்த்த தமிழ் அறிஞர்கள் பலரும் என்னை பாராட்டினர். என்னை முதலில் திட்டியவர் கூட என்னை மனமுவந்து பாராட்டியது எனக்கு கிடைத்த வெகுமதியாகும்.

4 மாதத்தில் எழுதிய இந்த குறள்வடிவ விளக்கத்தை எனது கூகுள் குழும நண்பர்களின் உதவியுடன் கடந்த 3 வருடங்களாக திருத்தம் செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. இதனை புத்தகமாக வெளியிடும் பணிகளில் 99.99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த புத்தகத்தை தமிழ் அறிஞர் குன்றக்குடி அடிகளார் திருக்கரங்களால் விரைவில் வெளியிட இருக்கிறேன்.

குறள்வடிவ புத்தகமானது அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் இலவசமாக வழங்கிடவும், மற்றவர்களுக்கு ரூ.133க்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்.

குறள் வடிவான இந்த விளக்கம் படித்தவுடனே சட்டென்று புரிந்துவிடும் என்பதால் மாணவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்த குறள் விளக்கம் தமிழகத்திலுள்ள அனைத்து மாணவர்களிடத்திலும் சென்று சேர வேண்டும் என்பதே எனது தீராத ஆசையாகும் என்றார்.

பொறியாளர் துரை ''திருக்குறளின் இரண்டாம் பாகம்'' என்ற பெயரில் திருக்குறள் போன்றே அதிகாரங்களின் வரிசையில் புதுக்குறள்களை எழுதி வருகிறார். இதிலும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட எண்ணிக்கையில் குறள்களை எழுதியுள்ளார்.

இன்றுள்ள இன்டர்நெட், இமெயில், செல்போன் காலத்தில் இளைய தலைமுறையினர் கேளிக்கை கொண்டாட்டங்களில் தான் தங்களின் பெரும்பங்கு நேரத்தை வீணடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இளைதலைமுறையினரும், வரும் தலைமுறையினரும் திருக்குறளின் புனிதத்தை உணரும் வகையில் பொறியாளர் துரை மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது.

பொறியாளர் துரையை தொடர்புகொள்ள...919443337783 என்ற எண்ணை டயல் செய்யவும்.

துரை திருக்குறளுக்கு குறள் வடிவில் எழுதியுள்ள விளக்கம். (எடுத்துக்காட்டு)

குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

விளக்கம்: அகரம் முதலாம் மொழிக்கு; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு

குறள்: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

விளக்கம்: பேருவகை கொள்வாள்; தன்மகனை நல்லதாய்
ஊர்சொல்ல கேட்டறியும் தாய்

இப்படியாக இவர் 1330 குறள்களுக்கும் குறள் வடிவில் விளக்கம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
Durai, Tuticorin based engineer has written an explanation for Thirukural in the kural style itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X