நீதிமன்றங்களில் வழக்குகள்
அரசு உத்தரவின்பேரில், மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் துணி வகைகள் வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதியிலிருந்து வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் என்பவரும், வழக்கறிஞர் செங்கொடி மற்றும் சிலர் நத்தம் காலனி சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். இவ்வழக்குகளை பல்வேறு நாட்களில் விசாரித்த உயர்நீதிமன்றம் 18.03.2013 அன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டு, மனுக்களின் மீதான விசாரணையை 27.03.2013க்கு ஒத்தி வைத்தது.
இதனையடுத்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறித்த அறிக்கையை 27.03.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர், உயர்நீதி மன்ற உத்தரவுப்படி, 5.4.2013 அன்று, உள்துறை செயலாளர், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்தனர்.
அன்றைய தினம் நீதிமன்றம் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றக் கோருவது தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 22.04.2013க்கு ஒத்தி வைத்துள்ளது. நத்தம் காலனி சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தற்போது மாநில குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையில் சில எதிரிகளை கைது செய்வதற்காகவும், ஆவணங்கள் சேகரிப்பதற்காகவும், நிபுணர்களின் அறிக்கை பெறவும் வேண்டி புலன் விசாரணையில் உள்ளன.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.