நோ மருந்து... நோ மாத்திரை... பி.பி. பிரச்சனைக்கு ஒரு சின்ன ஆபரேசன்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
இந்த மருத்துவமுறை நடைமுறைக்கு வந்தால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இரத்த அழுத்தத்தினால் உயிரிழப்பதை தடுக்க முடியும். இதனால் மாத்திரை பயன்பாடும் குறைக்கப்படும் என நம்பப்படுகிறது.
மேலும் வீரியமான மருந்துகளை பயன் படுத்துவதில் இருந்தும், தினந்தோறும் மருந்து உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்தும் நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கும்.
லண்டன் ஈஸ்ட்பர்னில் உள்ள இருதய அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் கடந்த மாதம் முதன் முறையாக இந்த அரை மணி நேர ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
தொடைப் பகுதிக்கு ரத்தத்தைக் கொண்டு வரும் ரத்தக் குழாய்களையும், தொடையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் ஒரு செயற்கையான சிறிய பைப் மூலம் இணைப்பது தான் இந்த ஆபரேசன். இதன்மூலம் உடனடியாக இரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'நீண்ட கால மருந்துகளால் குண்மாகாத நோயாளிகளுக்கு இந்த மருத்துவமுறை வரப்பிரசாதமாக இருக்கும்' என மருத்துவர் நெயில் தெரிவித்துள்ளார்.
இரண்டு அல்லது மூன்று மருந்துகளை உண்டும் குணமாகாத நோயாளிகளுக்கு தீர்வு அளிப்பதற்காகவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாம்.
இந்த மருத்துவமுறை இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தற்காலிகமான அல்லது நிரந்தர தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.