பி.சி. சாக்கோவை நீக்க இணைந்த திமுக- அதிமுக! சபாநாயகரிடம் 15 எம்.பிக்கள் கூட்டாக கோரிக்கை!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 15 எம்.பிக்கள் கூட்டாக சென்று சபாநாயகர் மீராகுமாரிடம் நேரில் வலியுறுத்தினர்.
பின்னணி
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தியது. இதன் தலைவராக காங்கிரஸின் சாக்கோ செயல்பட்டு வருகிறார். இக்குழு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இது தொடர்பாக மன்மோகன்சிங்குக்கு 3 முறை பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடிதம் அனுப்பியிருக்கிறார். மேலும் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கூட்டுக் குழு முன்பு பதிலளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தி வந்தார். ஆ.ராசாவை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் இறுதி வரைவு அறிக்கை ஊடகங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டம் ஒத்திவைப்பு
ஆ. ராசாதான் பிரதமரை தவறாக வழிநடத்தினார் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் சிதம்பரத்துக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலம் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. கூட்டுக் குழுவின் உறுப்பினர்களுக்கே வரைவு அறிக்கை கிடைக்காத நிலையில் ஊடகங்களுக்கு எப்படி கசிந்தது? என்று எதிர்க்கட்சிகள் கிடுக்குப் பிடி கேள்வி கேட்டு வந்தன. இந்த நிலையில் இன்று காலை ஜேபிசியின் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இக்குழுவில் இடம்பெற்றிருந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான அம்பிகா பானர்ஜி காலமானதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
சபாநாயகரிடம் 15 எம்.பிக்கள் வலியுறுத்தல்
பின்னர் பிற்பகலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, அதிமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகியவற்றின் 15 எம்.பி.க்கள் சபாநாயகர் மீரா குமாரை நேரில் சந்தித்து பிசி சாக்கோ மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஒரு கடிதமும் இதர கட்சிகளின் சார்பாக தனித்தனியே கடிதங்களும் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டன.
பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் சாக்கோவையும் சேர்த்து மொத்த 30 பேர் உறுப்பினர்களாக உள்ளது. தற்போது சாக்கோவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஆதரிக்கின்றன.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சாக்கோ, கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையை வாக்கெடுப்புக்கு இடம் கொடுக்காமல் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அம்பிகா பானர்ஜி எம்.பி. மறைவால் இன்று நாடாளுமன்ற லோக்சபா இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது.