சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்கியது
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு 2 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று துவங்கியது.
காலை 7.25 மணிக்கு இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. 8.15 மணிக்கு அரக்கோணம் வந்தடைந்தது. இங்கு ரயில் உபயோகிப்போர் சங்கம் சார்பில் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் டிரைவர்களுக்கு மாலை அணிவித்ததோடு பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
பின்னர் காட்பாடி வந்தபோதும் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 10 மணிக்கு ஆம்பூரை ரயில் அடைந்ததும் அங்கும் உற்சாக வரவேற்பு தரப்பட்டது. இந்த ரயிலில் வேலூர் தொகுதி எம்.பி. அப்துல்ரகுமானும் பயணித்தார்.
இந்த ரயில் பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடைந்தது.
தினமும் சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த ரயில் காலை 7.25 மணிக்கு புறப்படும். பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும்.
இரு நகரங்களுக்கும் இடையே உள்ள சுமார் 360 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 6 மணி நேரத்தில் கடக்கிறது. இந்த டபுள் டெக்கர் ரயிலில் அமரும் வசதி கொண்ட 10 ஏசி சேர் கார் பெட்டிகள் உள்ளன. இதில் மொத்தம் 1,200 பேர் பயணம் செய்யலாம்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்கார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூர் கன்டோன்மன்ட்டில் நின்று செல்லும். பெங்களூரில் இருந்து சென்னை செல்லும்போது மட்டும் இந்த ரயில் ஆம்பூரிலும் நிற்கும்.
இந்த ரயிலுக்கான சென்னை சென்ட்ரல்- பெங்களூர் டிக்கெட் கட்டணம் ரூ. 470 ஆகும்.