எம்.பி.பி.எஸ் விண்ணப்பம் மே 9ம் தேதி முதல் வினியோகம்
சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதியை மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மே 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக 40,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிபதற்கு கடைசி நாள் மே 20ம் தேதி.
கவுன்சிலிங் எப்போது
பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதியன்று மருத்துவக் கவுன்சிலிங் தொடங்கியது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு தாமதமாக வெளியிடப்பட்டதால் கவுன்சிலிங் தாமதமாக தொடங்கியது. அதனால் இந்த முறை பிளஸ் 2 முடிவுகள் வந்த பிறகே கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இடம் அதிகரிப்பு
கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கும் ஒரு சில மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை இடம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அதிகம்
கடந்த 2010ம் ஆண்டு 22,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 2011ம் ஆண்டு 25,000 விண்ணப்பங்களும், 2012ம் ஆண்டு 27,877 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.