வரதட்சணை: மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய கணவன் குடும்பத்தினர்!
குண்டூர்: வரதட்சணைக் கேட்டு கணவனும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து குண்டூரில் ஒரு பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர்.
கணவரின் உறவினரான மருத்துவ ஊழியர் மூலம் இக்கொடூர செயலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை சம்பந்தப்பட்ட பெண் வேடுல்லாபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் மூலமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
8 மாத கர்ப்பிணியான அவர், தனது கணவர் முத்யாலா ஸ்ரீனிவாச ரெட்டி, மாமனார் வெங்கடேஷ்வர ரெட்டி மற்றும் மாமியார் இந்திரவதி ஆகியோர் மீது வரதட்சனைக் கேட்டு கொடுமை படுத்தியதாகவும், எச்.ஐ.வி ரத்தத்தை கட்டாயப் படுத்தி தன் உடலில் செலுத்தியதாகவும் புகார் கூறியுள்ளார். மேலும், இந்த கொடூரச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கம்பவுண்டர் நாகிரெட்டி மீதும் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் புகாரையடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.