4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல்: ஜெயலலிதாவுக்கு எதிரான திமுகவின் வழக்கை கைவிட்ட ஹைகோர்ட்!
2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனாலும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக அவரது 4 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜெயலலிதா உண்மையை மறைத்து 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி.யும் தொ.மு.ச. தலைவருமான செ.குப்புசாமி ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
அதில், ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்வது குற்றம். ஆனால், ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று உண்மையை மறைத்துக் கூறியுள்ளார்.
எனவே ஜெயலலிதா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு 13.6.2007 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார்.
ஆனால் வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ், ஆர்.மாலா ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மனுதாரர் செ.குப்புசாமி சமீபத்தில் மரணமடைந்துவிட்டார்.
இந் நிலையில் நாகப்பட்டினம் தி.மு.க. எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குப்புசாமி மரணமடைந்துவிட்டதால், அவரது வழக்கை தொடர நான் விரும்புகிறேன். நான்கு வேட்புமனு தாக்கல் செய்த பிரச்சனை சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையத்தில் நானும் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். எனவே செ.குப்புசாமிக்கு பதிலாக அந்த வழக்கில் மனுதாரராக என்னை சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவை தாக்கல் செய்துள்ள விஜயன், குப்புசாமி தாக்கல் செய்த பொதுநலன் வழக்கில் சேர்க்கப்படுவதற்கான சட்ட ரீதியான பிரதிநிதி இல்லை. இந்த வழக்கில் இணைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக மனுதாரர் இருந்திருந்தால், உயர் நீதிமன்றத்திலோ அல்லது சுப்ரீம் கோர்ட்டிலோ வழக்கு நிலுவையில் இருந்தபோதே அதில் இணைந்திருப்பார். மேலும், இறந்தவருக்குப் பதிலாக என்னை சேர்க்க வேண்டும் என்று மனுதாரர் வைக்கும் கோரிக்கையை சட்ட ரீதியாக ஏற்க முடியாது. மனுதாரரின் மனுவை ஏற்காவிட்டாலும், அதனால் மனுதாரருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
நடவடிக்கைக்கு அவசியம் இல்லை:
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சொன்னபடி, ஜெயலலிதா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியின் பரிசீலனைக்கு உட்பட்டது. புவனகிரி, புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை எங்கள் முன்பு வைக்கப்பட்டது.
அதில், ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை, எங்களிடம் வேட்புமனு பரிசீலனையின்போது ஜெயலலிதா கொடுத்தார் என்று கூறியுள்ளனர். எனவே உண்மை எதையும் அவர் மறைக்கவில்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் ஏற்படவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், விஜயனின் மனுவை ஏற்க காரணங்கள் இல்லை. விஜயனின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குப்புசாமியின் வழக்குகள் கைவிடப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.