எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லம் நினைவு இல்லமாகுமா?
சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் வசித்த ராமாவரம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
சட்டசபையில் இன்று நடைபெற்ற சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் இல்லம், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நினைவு இல்லமாக மாற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்.ஜி.ஆர். எழுதிய உயிலின்படி ராமாவரம் இல்லத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தியாகராய நகர் ஆற்காடு தெருவில் எம்.ஜி.ஆர். வசித்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் ராமாவரம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் எண்ணம் இல்லை என்றார்.