மரக்காணத்தில் கிராம மக்களுடன் பாமகவினர் மோதல்: கார்- பஸ்களுக்கு தீ வைப்பு- 2 பேர் பலி
மரக்காணம்: மரக்காணம் அருகே பாமகவினருக்கும் தலித் கிராமத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.
பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நேற்று நடந்த சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாமகவினர் வாகனங்களில் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் வந்தன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தலித் காலனியில் உள்ள கட்டையான் தெரு என்ற பகுதி வழியாக பாமகவினர் சென்றபோது அப்பகுதி மக்களுடன் பிரச்சனை ஏற்பட்டது. இந்த இடத்தில் பாமகவினர் வந்தபோது அந்த ஊரை சேர்ந்த 3 பேர் மீது அவர்களது வாகனம் மோதியதாகவும் இதையடுத்து இரு தரப்பும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து அந்த ஊர்காரர்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பாமகவினரின் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதையடுத்து அந்த ஊர் மக்களுக்கும் மாநாட்டிற்கு சென்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வீடுகள், வாகனங்களுக்குத் தீ:
அந்த பகுதி வழியாக வந்த வாகனங்கள் தாக்கப்பட்டன. இதில் ஒரு கும்பல் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்தது.
இந்தக் கும்பல் கற்களை வீசியதில் அந்த வழியே சென்ற பாண்டிச்சேரி அரசுப் பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து ஒரு தனியார் பஸ், 4 அரசு பஸ்கள் மற்றும் ஒரு காருக்கு தீவைக்கப்பட்டது. இதில் அந்த வாகனங்கள் எரிந்து சாம்பலாயின. நல்லவேளையாக பயணிகளை இறங்க அனுமதித்துவிட்டே அந்தக் கும்பல் தீ வைத்தது.
மேலும் மாநாட்டுக்கு சென்ற வாகனங்கள் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, கலவரக்காரர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அப்போது விழுப்புரம் எஸ்.பியின் ஜீப்பும் தாக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
2 பேர் 'விபத்தில்' பலி:
மாநாட்டுக்கு சென்றவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பி வந்தால் மீண்டும் கலவரம் ஏற்படலாம் என்பதால் எந்த வாகனத்தையும் நேற்றிரவு கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
கலவரம் நடந்த இடத்தில் தஞ்சாவூரை சேர்ந்த விவேக் என்பவரும் இன்னொருவரும் படுகாயத்துடன் கிடந்தனர். அவர்களில் விவேக்கை போலீசார் புதுவை பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காயமடைந்த இன்னொருவர் புதுவை ஜிப்மர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், இருவருமே விபத்தில் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே போல இந்த மோதலில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வீரமணி, கோலியனூரை சேர்ந்த ஞானவேல், மேலியங்கிரியை சேர்ந்த சீனு ஆகியோர் காயமடைந்தனர். இந்த மூவரும் புதுவை ஜிப்மர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.
கலவரத்தை தொடர்ந்து போலீஸ் ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் மரக்காணம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 100 பேர் கொண்ட மத்திய போலீஸ் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
4 பேர் மட்டும் கைது:
இன்று காலை முதல் கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னை -புதுவை இடையே வழக்கம் போல போக்குவரத்து நடந்து வருகிறது.
கலவரம் தொடர்பாக வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே திண்டிவனம் அருகே உள்ள வானூரில் நள்ளிரவில் மர்ம கும்பல் கடைகளுக்கு தீ வைத்தது. அதில் டீக்கடை, பழக்கடை உள்பட 10 கடைகள் எரிந்து சாம்பலாயின. இதையடுத்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.