சாரதா சிட்பண்ட் மோசடி: திரிணாமுல் எம்.பி. மீது புகார் பதிவு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கியிருக்கும் சாரதா சிட்பண்டு நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால்கோஷ் மீது வேறு ஒரு புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் லட்சக்கணக்கானோரிடம் பணம் வசூலித்த சாரதா சிட்பண்ட் நிறுவனம், முதிர்வு காலம் முடிந்த பின்னரும் கோடிக்கணக்கான தொகையை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தரவில்லை. இதுதொடர்பாக அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாரதா சிட்பண்ட் சார்பில் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக்கூறி கொல்கத்தாவின் பார்க் தெரு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சாரதா நிறுவன தலைவர் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிதி நிறுவன மோசடி குறித்து சிறப்பு விசாரணைக் குழு, நீதித்துறை விசாரணை நடந்து வருகிறது.