சிட்பண்ட் மோசடி.. பாதிக்கப்பட்டோருக்கு மேலும் ரூ500 கோடி- மத்திய அரசிடம் கோரப்படும்: மமதா பானர்ஜி
இதுதொடர்பாக அவர் நேற்று கூறுகையில், இடதுசாரிகள் தலைமையிலான முந்தைய அரசின் போது சஞ்சைத்தா மற்றும் வெரோனா ஆகிய நிதி நிறுவனங்களும் முதலீட்டாளர்களை ஏமாற்றின அப்போதே கடும் சட்டம் இயற்றியிருந்தால் இப்போது சாராதா குழுமத்தால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டார்கள்.இதுபோல, ரிசர்வ் வங்கி, பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆகியவையும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்டறியத் தவறி விட்டன. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் முதலீடு செய்த தொகையைத் திருப்பித் தருவதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, இதற்காக மத்திய அரசிடம் ரூ.500 கோடி கேட்கப்படும்.
எதிர்காலத்தில் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் புதிய சட்டம் ஏப்ரல் 30ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மே 5ந் தேதிக்குள் இந்த சட்டத்துக்கு ஆளுநர் எம்.கே. நாராயணன் ஒப்புதல் அளிப்பார். மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு இந்த சட்டம் வகை செய்யும் என்றார் அவர்.