தேர்தல் வழக்கு- சென்னை ஹைகோர்ட்டில் மு.க. அழகிரி ஆஜராகி விளக்கம்!
வழக்கு என்ன?
கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மதுரை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட மு.க. அழகிரி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட பி.மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதன் காரணமாகவே அழகிரி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் என்பது மோகனின் வாதம். மேலும் தேர்தலில் வெற்றிபெற மு.க.அழகிரி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 34 ஏஜெண்டுகளை நியமித்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார் மோகன்.ஆனால் வழக்கு நிலுவையில் இருந்த போது மோகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தம்மை மனுதாரராக ஏற்று இந்தத் தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாற்று வேட்பாளர் ஏ.லாசர் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அழகிரி விளக்கம்
இந்த வழக்கு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி தம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார். தேர்தலின்போது வாக்காளர்கள் யாருக்கும் தமது தரப்பில் பணம் எதுவும் தரவில்லை என்று கூறிய அழகிரி தேர்தல் முறைகேடு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது உண்மையில்லை என்றும் கற்பனையானது என்றும் தெரியாது என்றும் அவர் பதிலளித்தார். வாக்குச் சேகரிக்கும் பணியின்போது பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து தன்னை வரவேற்றது உண்மைதான் என்று கூறிய அழகிரி அதற்காக அவர்கள் யாருக்கும் தனது தரப்பில் பணம் எதுவும் தரவில்லை என்றார்
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.