மரக்காணம் வன்முறை- 1,512 அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸ் வழக்கு
மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வீடுகள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 1,512 அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது மரக்காணம் பகுதியில் பாமகவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது.
அப்போது தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியில் இருந்த 11-க்கும் அதிகமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழக அரசின் 4 பேருந்துகள், புதுச்சேரி அரசின் ஒரு பேருந்து, தனியார் ஒருவரின் கார் எரிக்கப்பட்டன. மேலும் காவல் கண்காணிப்பாளர் மனோகரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தப்பி ஓடிய போது இருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கலவரம் பாதித்த பகுதிகளை ஆட்சியர் வா.சம்பத், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிருந்தாதேவி, கண்காணிப்பாளர் மனோகரன், ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். கலவரம் தொடர்பாக 7 தனித்தனி வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் பகுதிகளைத் தாக்கியது தொடர்பாக வன்கொடுமை வழக்கு, அரசு பேருந்துகளுக்குத் தீ வைத்தது, பயணிகளைத் தாக்கியது, காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தைச் சேதப்படுத்தியது, கூனிமேடு கடைகளுக்குத் தீ வைத்தது, அனுமந்தம் சுங்கச்சாவடியை சேதப்படுத்தியது ஆகியவற்றுக்காக 1512 அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த ஒரு வழக்குக்கு ஒரு தனிப்படை வீதம் 7 தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.