224 வேட்பாளர்களை தேர்வு செய்ய 60 பேர் குழுவா?: காங். தலைமை மீது எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் புதிய வழியில் இறங்கியுள்ளது. அதனால் எனக்கு ஓய்வு அளித்து இருப்பது மகிழ்ச்சியே. இதில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. 80 வயதானவர்கள் பதவியிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என காங்கிரஸின் மேலிடம் எடுத்த முடிவின்படி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகினேன்.
நான் 52 ஆண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 40 ஆண்டு காலமாக காங்கிரஸில் இணைந்து செயலாற்றி வருகிறேன். கர்நாடகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் நானும் ஒருவர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அரசியல் வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய தேசிய, மாநில அளவிலான அனைத்து உயர் பதவிகளும் எனக்குக் கிடைத்தன. அதில் நல்ல முறையில் பணியாற்றி உள்ளேன்.
நான் முதல்வராக இருந்தபோது பெங்களூரை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றினேன். இதற்கு விப்ரோ, இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களான அஜிம் பிரேம்ஜி, நாராயணமூர்த்தி ஆகியோர் உதவினர். எனது முயற்சி இல்லையென்றால், அதன் பயனை ஹைதராபாத் அடைந்திருக்கும்.
ஆனால், கடந்த தேர்தல்களில் இதை வாக்குகளாக மாற்றிக் கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, தேர்தலில் இந்த முறை வெற்றி பெறுவது யார் என்பதை, தற்போது கூற முடியாது. மக்கள் முடிவு, எப்படி இருக்கும் என்பதை, யாராலும் கணிக்க முடியாது. மக்களின் தீர்ப்பை கணிப்பது கடிமானது. எப்போதும் அவர்கள் ரகசியத்தை வெளியிட மாட்டார்கள். சில நேரங்களில் தவறான தகவல்களை கேட்டு தவறானவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்து விடுவார்கள்.
முதல்வராக வேண்டும் என்று கட்சியில் ஒவ்வொரு தலைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால், முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதில் தான் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகு யாரை முதல்வரக நியமிக்க வேண்டும் என்று கட்சி முடிவு எடுக்கும். தேர்தலுக்கு பிறகு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
வேட்பாளர்கள் தேர்வு குழுவில் 1972ம் ஆண்டில் இருந்து நான் இருந்து வந்துள்ளேன். வழக்கமாக இந்தக் குழுவில் 15 முதல் 16 பேர் இருப்பார்கள். ஆனால், இந்த முறை தேர்வு குழு பட்டியலை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. காரணம், அதில் என்னையும் சேர்த்து 60 பேர் இருந்தனர். இப்படிப்பட்ட மிகப் பெரிய குழுவால், எப்படி, வேட்பாளர்களை, நேர்மையாக தேர்வு செய்ய முடியும்?. இதனால் தான் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொண்டேன்.
வட கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் கர்நாடக பகுதிகளில் பொறுத்தவரை காங்கிரசுக்கு எதிரி என்றால் அது பாஜகதான். அதேபோல், தென் கர்நாடகத்தில் சுமார் 8 மாவட்டங்களில் காங்கிரசுக்கும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையேதான் போட்டி. பெங்களூர் நகரில் எல்லா கட்சிகளுக்கும் சமபலம் உள்ளது என்று சேம் சைட் கோல் போட்டார் கிருஷ்ணா.
தேர்தலில் காங்கிரஸே வெல்லும் என கருத்துக் கணிப்புகள் வரிசையாகக் கூறி வரும் நிலையில், அப்படியெல்லாம் இல்லை, பொறுத்திருந்து பாருங்கள் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவரான கிருஷ்ணா கூறியிருப்பது அவர் கட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதையே காட்டுகிறது.