மாமிசத்தையும், மதுவையும் புறக்கணித்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும்: சுவாமி அக்னிவேஷ்
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போலீசாரை வைத்து மட்டும் கற்பழிப்பு போன்ற குற்றத்தை நிறுத்திவிட முடியாது. மக்கள் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் கற்பழிப்பு குற்றங்கள் பெருமளவு குறையும் என்று நான் நினைக்கிறேன். இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மது அருந்துவதை தவிர்த்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும்.
மது அருந்துவதால் தான் பல்வேறு குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடக்கின்றன. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உலகின் வயதான மனிதர் குறித்து ஆய்வு செய்ததில் அவர் ஒரு சைவப் பிரியர் என்பது தெரிய வந்துள்ளது.
அனைத்து நோய்கள் ஏற்பட மாமிசம் தான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை கற்பழித்தவர்களும் சரி, 5 வயது சிறுமியை கற்பழித்தவர்களும் சரி குடிபோதையில் இருந்துள்ளனர். இதன் மூலம் மது தான் அவர்களை குற்றம் செய்ய தூண்டியுள்ளது என்பது தெரிய வருகிறது. வருவாய் வருவதால் அரசு மது உற்பத்தியை நிறுத்தவில்லை. அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டு மது உற்பத்தி செய்கின்றன.
தினமும் ஒரு பில்லியன் மிருகங்கள் மாமிசத்திற்காக கொல்லப்படுகின்றன. இதன் பின்விளைவு பயங்கரமாக இருக்கும். பள்ளிகளில் மதுவால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை. ஒரு குற்றத்திற்காக தனி நபரை குறை கூற முடியாது. ஒட்டுமொத்த சமுதாயமும் தான் பொறுப்பு.
கற்பழிப்புக்கு மரண தண்டனை என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். மரண தண்டனையால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் உள்பட யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது. கசாபை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்றார்.