சோனியா- மன்மோகன் சிங் இடையே கருத்து வேறுபாடு முற்றுகிறது?
2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார்.
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது. இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து வலுப்பட்டுவிடும் என்பதால் அதை பிரதமர் விரும்பவில்லை. அதே நேரத்தில் அஸ்வனிகுமார் பதவி விலகாவிட்டால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் சேர்த்து பிரச்னையை உருவாக்கும் என சோனியா நினைக்கிறார்.
மேலும் சமீப காலமாக மன்மோகன் சிங் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது கவலை அளிக்கிறது என்று நேரடியாகவே சோனியா விமர்சித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் கூடிய காங்கிரஸ் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தான் இந்தக் கருத்தை சோனியா முன் வைத்துள்ளார். இக் கூட்டத்தில் சோனியா, பிரதமர் தவிர, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப. சிதம்பரம், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கூட்டணியில் இருந்து திமுக விலக நேர்ந்ததாகவும் சோனியா காந்தி கருதுவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பிரதமரை நீக்கும் அளவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் அதிகாரம் இல்லை என்றும், அந்த அளவுக்கு மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துக் கொண்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.