பாஸ்டனில் எனக்கு நடந்த அவமரியாதைக்கு சல்மான் குர்ஷித்தின் சதியே காரணம்: ஆஸம் கான்
அகிலேஷ் யாதவ், ஆஸம் கான் உள்ளிட்ட உத்தரப் பிரதேச குழு சமீபத்தில் குண்டுவெடிப்பு நடந்த பாஸ்டன் நகர விமான நிலையம் வந்திறங்கிய நிலையில், அவர்களை ஒரு பக்கம் இந்தியத் தூதரக அதிகாரிகள் வரவேற்றுக் கொண்டிருக்க, ஒரு அமெரிக்க பெண் அதிகாரி ஆஸம் கானை மட்டும் தனியே அழைத்துச் சென்று தீவிரவாதி ரேஞ்சுக்கு விசாரணை நடத்தினார்.
இதனால் கடுப்பான ஆஸம் கான் அந்த அதிகாரியை வாய்க்கு வந்தபடி திட்ட, அந்த அதிகாரியும் குரலை உயர்த்த, மூத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் வந்து ஆஸம் கானை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
சல்மான் குர்ஷித் தான் காரணம்:
இந் நிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் போட்ட சதித் திட்டமே காரணம் என்று ஆஸம் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது எனது தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும் அகிலேஷ் யாதவுக்கும் தெரியும். நாங்கள் நாடு திரும்பியவுடன் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவு குறித்து மறு ஆய்வு செய்வோம்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவையும் பாமக தலைவர்களையும் அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர்களுடன் சமாஜ்வாடி கட்சி இணைந்து மூன்றாவது அணி உருவாக்கவும் வாய்ப்புள்ளது. இந்த அணிக்கு முலாயம் சிங் தலைமை வகிப்பார், இந்த அணி வென்றால் அவரே பிரதமர் ஆவார்.
இந்தியாவில் காங்கிரசில் அல்லாத மூத்த முஸ்லீம் தலைவர் நான். இதை காங்கிரசால் சகிக்க முடியவில்லை. இதனால் சல்மான் குர்ஷித் தனது அமைச்சக செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக என்னை தனியே விசாரிக்க வைத்துள்ளார்.
என்னை அமெரிக்க அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருந்தபோது, எங்களை வரவேற்க வந்திருந்த இந்தியத் தூதரக அதிகாரிகள் சும்மா நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு உதவ வேண்டாம் என்று அவர்களுக்கு உத்தரவு வந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.
இவர்கள் வாயே திறக்காததால் நான் தான் என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்தது என்றார் ஆஸம் கான்.
இந்திய தூதரக விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்த அகிலேஷ் யாதவ்:
இந் நிலையில் தன்னை வரவேற்று இந்தியத் துணை தூதரகம் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரத்து செய்துவிட்டார்.
தனது அமைச்சர் ஆஸம் கானிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை செய்ததை ஆட்சேபித்து விருந்து நிகழ்ச்சியை அவர் ரத்து செய்தார்.
ஹாவர்ட் நிகழ்ச்சியும் புறக்கணிப்பு:
அதே போல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பங்கேற்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துவிட்டார்.