சந்திரபாபு நாயுடுவின் 7 மாத பாதயாத்திரை ஒருவழியாய் முடிந்தது!: ஓட்டு கிடைக்குமா?
இந்த ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள தீர்மானித்த நாயுடு, கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.
தெலுங்கானா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திராவில் உள்ள 16 மாவட்டங்களில் 208 நாட்களில் 2,817 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நேற்று விசாகப்பட்டினத்தில் தனது பாதயாத்திரையை முடித்துள்ளார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
7 மாத கால பாதயாத்திரையை முடித்து விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று ஹைதராபாத் திரும்பிய சந்திரபாபு நாயுடுவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது மைத்துனரும், நடிகருமான பாலகிருஷ்ணா, மகன் லோகேஷ் உள்ளிட்ட குடும்பத்தினரும் வந்தனர்.
இதற்கு முன்னர் 64 வயதான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, 2003ம் ஆண்டு 64 நாட்களில் 1500 கிலோமீ ட்டரைக் கடந்து சாதனை புரிந்தார். அதன் மூலம் அவரது அரசியல் செல்வாக்கு உயர்ந்தது. 2004ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தவர், 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்த நாயுடுவின் பதவியை பதம் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நாயுடும் நடந்து முடித்துள்ளார். ஆனால், இவரது பாதயாத்திரைக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
அந்த மாநிலத்தை நீண்ட காலம் ஆண்டு வந்த தெலுங்கு தேசம் இப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகளைவிட பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாபெரும் தலைவராக இருந்த நாயுடுவின் செல்வாக்கு இப்போது சுருங்கிவிட்டது. பாத யாத்திரை மூலம் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயன்றார் நாயுடு.