3வது அணி ஆட்சி அமைத்தால் மத்திய அரசில் இ.கம்யூ இடம்பெறும்: : ஏ.பி. பரதன்
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் மூன்றாவது அணி உருவாகி ஆட்சி அமைத்தால், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆட்சியில் இடம் பெறுவோம் அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். யார் பிரதமராக வருவார் என்று அவருடைய முகத்தை பார்த்து வாக்காளர்கள் வாக்களிப்பது இல்லை. கட்சி அல்லது கூட்டணி அடிப்படையில்தான் வாக்களிக்கின்ற்னர். சீன ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு சீனாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.
இதனிடையே திருச்செந்தூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன், வருகிற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். அதுபோல் பாரதிய ஜனதாவும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் உள்ள மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டால் இடது சாரிகள் கட்சிகள் ஆதரவுடன் 2014-ம் ஆண்டு மத்தியில் புதிய ஆட்சி அமையும். தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்குவங்காளத்தில் மம்தா, உ.பி.யில் மாயாவதி ஆகியோர் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.