அல்ஜசீரா உள்பட 10 டி.வி. சேனல்களின் உரிமம் ரத்து: ஈராக் அதிரடி
பாக்தாத்: மீடியா ஒழுங்குமுறைகளை மீறி, ஒரு பிரிவினருக்கு மட்டுமே சாதகமான செய்திகளைத் தருவதாக கூறி, 10 டிவி சேனல்களின் உரிமையை ரத்து செய்து ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈராக் நாட்டில் சமீப காலமாக ஷியா மற்றும் சன்னி பிரிவினரிடையே மீண்டும் மோதல்கள் தலைதூக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக இவர்களுக்குள் நிகழ்ந்த பல்வேறு மோதல் சம்பவங்களில் மட்டும் 180க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த மோதல்களைப் பற்றி சன்னி பிரிவினர் மற்றும் ஷியா பிரிவினர் நடத்தி வரும் சில தனியார் டி.வி. சேனல்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, அவரவர் சார்ந்த இனத்திற்கு சாதகமாகவும், எதிர் இனத்திற்கு பாதகமாகவும் சில சேனல்கள் ஒருதலை பட்சமாக செய்தி வெளியிட்டு வருவதாக ஈராக் ஊடக கமிஷனுக்கு புகார்கள் வந்தன.
புகாரின் அடிப்படையில், அல்-ஜசீரா, அல்-ஷரீக்கியா, பாக்தாத், பலுஜா, அல்-கர்பியா உள்ளிட்ட 10 தனியார் டி.வி. சேனல்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ஈராக் அரசு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.