’லடாக் பகுதியில் ஆக்கிரமிப்பு’: பிரதமர் கருத்து எதிரொலி- இந்தியாவுடன் பேச்சு நடத்த சீனா ஒப்புதல்
பீஜிங்: 'பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தை கவனத்தில் கொண்டு இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்' என சீனா அறிவித்துள்ளது.
சென்றவாரம் திடீரெனெ, காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் இந்திய பகுதிக்குள் 19 கி.மீ. தூரம் வரை ஊடுருவி, அங்கு கூடாரம் அமைத்து சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு இந்தியா, தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது.
இப்பிரச்சினையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதனால், படைகளை திரும்பப்பெற சீன ராணுவம் மறுத்து விட்டது.
இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங், இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று கூறினார். இந்நிலையில், பிரதமரின் கருத்து குறித்து சீன அரசிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு விளக்கம் அளித்து சீன வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கான வழிமுறை மூலம் தொடர்பு கொண்டுள்ளன. அதே சமயத்தில், எல்லை பகுதியில் அமைதியை கடைபிடிப்போம்.
சமீபகாலமாக, இந்தியாவும், சீனாவும் நட்புரீதியான ஒத்துழைப்பை வளர்த்து வருகின்றன. அதே நேரத்தில், எல்லை தகராறு உள்ளிட்ட பிரச்சினைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. இந்த பிரச்சனைகள், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க விரும்புகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.