தூத்துக்குடியில் ரூ.304 கோடியில் புதிய பொழுதுபோக்கு பூங்கா
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் 45 ஏக்கரில் ரூ.304 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து துறைமுக தலைவர் நடராஜன் கூறியதாவது, 'தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் சென்னை மெரீனா கடற்கரை போன்று சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் பொழுது போக்கு பூங்கா ரூ.304 கோடி ரூபாயில் 45 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கடலுக்குள் செல்லும் வகையில் 50 மீட்டர் தூரத்திற்கு 3 தூண்கள் நிறுவப்பட்டு பாதைகள் அமைக்கப்படும். படகு பந்தயம், கடலின் அடியில் செல்லும் வகையில் கண்ணாடி படகுகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இந்த பூங்காவில் இருக்கும்.
மிதக்கும் உணவகம், பொழுது போக்கு மியூசியம், நீச்சல்குளம், மீன்களின் இயக்கத்தை காணும் வகையில் கடலினுள் மீன் பண்ணை ஆகியவை அமைக்கப்படும். இவை தவிர சுற்றுலா பயணிகளின் அனைத்து பொருட்களையும் வாங்கும் வகையில் ஷாப்பிங் மையமும் இங்கு செயல்படும். மேலும் நீர் மற்றும் எரிபொருள் சேமிப்பதை பழுது நீக்கும் மையம், கப்பல்களை தூக்கும் புல்டோசர்கள் ஆகியவை இருக்கும்.
சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுலா பூங்காவாக தூத்துக்குடி கடற்கரை பூங்கா விளங்கும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.