“என்கவுண்டரில் கொல்லப் போறாங்க”... அலரும் அட்டாக் பாண்டி: முன் ஜாமீன் கேட்கிறார்
திமுகவைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் கடந்த ஜனவரி 31ம் தேதி மதுரையில் அவரது வீட்டருகிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் 18 பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அட்டாக் பாண்டி தலைமறைவாக உள்ளார். அட்டாக் பாண்டியை தவிர மற்ற கூட்டாளிகள் 11 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அட்டாக் பாண்டியின் நெருங்கிய கூட்டாளி பிரவின்குமார் கைது செய்யப்பட்டார்.
அட்டாக் பாண்டி மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை நடந்து 3 மாதம் ஆகியும் அட்டாக் பாண்டி போலீசாரிடம் சிக்கவில்லை. அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அட்டாக் பாண்டி முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் என்னை போலீசார் தொடர்புபடுத்துவது பொய்யானதாகும். இந்த கொலை வழக்கில் நத்தம் கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரிடம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் கொலை சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆனால் போலீஸ் அதிகாரிகளின் தூண்டுதல் பேரில் பொட்டு சரேஷ் கொலை வழக்கில் என் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
போலீஸ் உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் ஒவ்வொரு மாதமும் என் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அரசில் காழ்ப்புணர்ச்சியில் வழக்கு பதிவு செய்த போலீசார் என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஆனால் மதுரை ஹைகோர்ட் கிளை குண்டர் சட்டத்தில் இருந்து என்னை விடுவித்து உத்தர விட்டது.
பொய்யான வழக்குகளை என் மீது ஜோடித்து போலீசார் என்கவுண்டரில் என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
எனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது. அதற்காக சிகிச்சை பெற வேண்டியது உள்ளது. என்னை போலீசார் கைது செய்தால் துன்புறுத்துவார்கள் எனவே இந்த கொலை வழக்கில் போலீசார் என்னை விசாரிக்க வேண்டிய முகாந்திரம் தற்போது ஏற்படவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அட்டாக் பாண்டி தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அட்டாக் பாண்டி தரப்பில் வக்கீல் வேல்கனி ராஜா ஆஜரானார். இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.