"ஃபேஸ்புக் வீட்டு"க்கு ஞாநி வைத்த 'செக்போஸ்ட்'!
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஞாநி தனது ஃபேஸ்புக் சுவரில் எழுதியிருந்தது:
இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 'தமிழர்கள்' என்று சொல்லிக் கொள்வோரின் ஆர்ப்பாட்டம் அறிந்து வருத்தப்படுகிறேன். 1983 இனக்கலவரத்தின் போது சங்ககாரா ஆறு வயது சிறுவன். அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா தன் வீட்டில் 35 தமிழர்களுக்கு (குறிப்பாக பல சிறுவர்களுக்கு) அடைக்கலம் கொடுத்து கலவர காலம் முழுவதும் அவர்களைக் காப்பாற்றியவர். ஈழத் தமிழர்களின் இன்றைய அசல் எதிரிகள், இங்கே சிங்களவர்களுக்கு எதிராக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர்தான் என்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
ஞாநியின் இந்த கருத்துக்கான எதிர்வினையின் அடிப்படையில் சனிக்கிழமையன்று தனது ஃபேஸ்புக்கில் இப்படி பதிவு செய்திருந்தார்..
முக்கிய அறிவிப்பு: என்னைப் பொறுத்தமட்டிலும் ஃபேஸ்புக் என்பது என் கருத்துகளை அவற்றுடன் உடன்பாடு உள்ள நண்பர்கள், உடன்பாடு இல்லாவிட்டாலும் மாறுபாடான எதிர் கருத்தை கண்ணியமாக என்னுடன் பகிர்ந்துகொள்ளும் சக உயிர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமேயானதாகும். ஆனால் சில பிரச்சனைகளில், குறிப்பாக தி.மு.க, அ.இ.அ.தி.மு.க அரசியல், ஈழம் தொடர்பானவற்றில் நான் கருத்து தெரிவிக்கும்போது, வேண்டுமென்றே இங்கு வந்து என் கருத்தைத் திரித்து, என்னை அவதூறு செய்து, சாதி வெறியுடன் என்னைத் திட்டித்தீர்த்து உணர்ச்சி பொங்கத் தம் புரட்சிக் கடமைகளை ஆற்றிவிட்டுப் போகும் சில கும்பலகள், என் நேரத்தையும் உழைப்பையும், என் நண்பர்கள் நேரத்தையும் வீணடிக்கின்றன. எனவே அடுத்த 24 மணி நேரம் மட்டுமே என் ஃபேஸ்புக் பொதுப் பார்வைக்கானதாக இருக்கும்.
அதற்குள் வந்து கடைசியாக திட்டிவிட்டுப் போக விரும்புவோர் திட்டிவிட்டுச் செல்லலாம். அதன் பின்னர் என் சுவர், நண்பர்களுக்கும் கண்ணியமான சக ஜீவிகளுக்கும் மட்டுமானதாக மாற்றப்பட்டுவிடும். என் நண்பர் பட்டியலில் இனைய விரும்புவோர், அசல் பெயர், தம்மைப் பற்றிய கல்வி, தொழில், வசிப்பிடம் விவரங்களை எனக்கு மெசேஜில் அனுப்பினால் மட்டுமே அவர்களை இணைப்பது பற்றி பரிசீலிப்பேன். இன்னும் 23 மணி நேரம் 50 நிமிடங்களே உள்ளன என்று ஒரு அதிரடி காலக்கெடு விதித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்றும் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது தான் இது..
இன்னும் சில நிமிடங்களில் நான் அறிவித்த 24 மணி நேர வரையறை முடியப் போகிறது. அதன்பின்னர் திங்கள் காலை முதல் நண்பர் பட்டியலில் இருப்போர் மட்டுமே என் ஃபேஸ்புக் வீட்டுக்கு வரவும் கருத்து தெரிவிக்கவும் இயலும். இதுவரை பொதுவாக அனைவரும் காணவும் கருத்து தெரிவிக்கவும் நான் அனுமதித்திருந்ததால் சுமார் 5 ஆயிரம் பேர் இங்கே வந்து கொண்டிருந்தார்கள். அதில் சில பத்து பேரின் கண்ணியமற்ற நடவடிக்கைகளினாலேயே இந்த முடிவை நான் எடுக்க வேண்டியதாயிற்று. என் மீது ஆசிட் ஊற்ற வேண்டுமென்றும் என்னைக் கொல்ல வேண்டுமென்றும் எல்லாம் பகிரங்கமாக சிலர் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இங்கே இனி நண்பர் பட்டியலில் இடம் பெறும் சில நூறு பேர்கள் மட்டுமே வர இயலும்.
எண்ணிக்கை குறைவதைப் பற்றி எனக்கு வருத்தமில்லை. தரமான கண்ணியமான கறாரான விவாதவெளியாக இந்த இடம் இருப்பதே முக்கியம். நான் எழுதும் கட்டுரைகளை தொடர்ந்து படிக்க விரும்புவோர் எப்போதும் www.gnani.net இணைய தளத்தில் படிக்கலாம். பட்டியலில் நண்பர் இணைக்கக் கோரி வந்த வேண்டுகோள்களைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் அவற்றிலிருந்து தேர்வு செய்து இணைப்பது முடிந்துவிடும். என் வேண்டுகோளை மதித்து மெசேஜ் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. எப்போதும் போல ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம். பல வண்மைகள் செய்வோம் என்ற பாரதியின் வரிகளே என்னை தொடர்ந்து வழிநடத்தும்...
ஞாநி என்றாலே எப்போதும் அதிரடி தான்!