இனி பாரதத்தாய் 121 கோடி முகமுடையாள்....: இதுலயும் பெண்கள் தான் அதிகமாம்
டெல்லி: நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா தன் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனாலும் இந்திய ஜனத் தொகை கூடிய வண்ணமே உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, பார்லிமென்ட்டில் நேற்று வெளியிட்டார்.
இது 2011 வரை உள்ள கணக்கு தான்...
1-3-2011 நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932 ஆகும். 2001-ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுலயும் பெண்கள் தான் பர்ஸ்ட்...
அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது.
மொத்தத்துல பீகார்ல தான் அதிகம்...
பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 83 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் 37 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 932 பேர் வசிக்கின்றனர்.
தமிழ்நாட்டுல 48.4 சதவீதம்...
நகர்ப்புற மக்கள் தொகையில் அதிகம் பேர் (97.5 சதவீதம்) டெல்லியிலும், 62.2 சதவீதம் பேர் கோவாவிலும், 52.1 சதவீதம் பேர் மிசோரத்திலும், 48.4 சதவீதம் பேர் தமிழ் நாட்டிலும், 45.2 சதவீதம் பேர் மகாராஷ்டிராவிலும் வசிக்கின்றனர்.