தவறான சிகிச்சையால் மகனை இழந்த பெற்றோரின் 14 ஆண்டு போராட்டம் வெற்றி: ரூ. 8 லட்சம் நஷ்டஈடு
பெங்களூர்: தவறான சிகிச்சையால் மகனை இழந்த பெற்றோரின் 14 ஆண்டுகாலப் போராட்டத்தின் பலனாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் ரூ.8 லட்சம் நஷ்ட ஈடு தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் வசித்துவரும், விஜயலட்சுமி, புட்டராசு தம்பதியினரின் ஒரே மகன் ராஜசேகருக்கு கடந்த 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ந் தேதி அன்று இரவு வழுக்கி விழுந்தததில் தலையில் பலத்த அடிபட்டது. மறுநாள், பிரபல சைத்தன்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஅவருக்கு வலிப்பு நோய்க்கான சிகிச்சைகளும்,மருந்துகளும் அளிக்கப்பட்டன. இதனால் அவரது உடலுறுப்புகள் செயலிழந்தன. 15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் ராஜசேகர் மரணம் அடைந்தார். இறுதி ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வந்த தங்களின் ஒரே மகனைத் தாங்கள் இழக்க நேரிட்டதற்குக் காரணம் மருத்துவமனைகளின் கவனிப்பின்மை என்பதுதான் என்று அந்தப் பெற்றோர், நீதிமன்றத்தின் உதவியை நாடினர்.
முதலில், சைத்தன்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜசேகர், பின்னர் மல்லையா மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். எனவே இரண்டு மருத்துவமனைகளின் மீதும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதலில் மருத்துவம் செய்த சைத்தன்யா நிர்வாகம், ராஜசேகரின் தந்தை, தனது மகனுக்கு வலிப்புநோய் வந்துள்ளதாகத் தெரிவித்தபடியால், அவருக்கு வலிப்பு நோய்க்குண்டான சிகிச்சைமுறைகள் அளிக்கப்பட்டன என்றும், மருத்துவமனையில் மீண்டும், வாந்தி மற்றும் வலிப்புநோயால் அவர் அவதிப்பட்டார் என்றும் தங்களது சிகிச்சைமுறையால்தான் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டது எனவும் வாதிட்டனர்.
மல்லைய்யா மருத்துவக் குழுவோ, தங்களின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே ராஜசேகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார் எனவும், சிறுநீரகக் கோளாறு, சுவாசக் கோளாறு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன எனவும், இத்துடன் வலிப்பு நோய்க்கான மருத்துவமும் அளிக்கப்பட்டு, அவரது உயிரைக் காப்பாற்ற கடைசிவரை முயன்றதாகவும் தெரிவித்தது
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நோயாளியின் வலிப்பு நோய் பற்றிய முந்தைய குறிப்புகள் எதுவும் இல்லாமலும், அதற்குரிய மருத்துவசோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமலும் அவருக்கு அதற்குரிய சிகிச்சைமுறைகள் அளிக்கப்பட்டது தவறு என்றும் இந்த மருந்துகளுக்கும், அவரின் உடல்நிலை மோசமடைந்ததிற்கும் தொடர்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்களின் அஜாக்கிரதையினால் இந்த மரணம் நேர்ந்ததாகக் கருதப்பட்டு, இரு மருத்துவமனைகளும் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் நஷ்டஈடாக ரூ 8 லட்சத்தை 10 சதவிகித வட்டியுடனும், மேலும் ரூ 2000மும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பினைப் பெற அந்தத் தம்பதியருக்கு 14 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. ஏற்கனவே, மாநில நுகர்வோர் மன்றம் ஒன்று, அந்தத் தம்பதியருக்கு, இழப்பீட்டுத் தொகையாக 3 லட்சம் ரூபாய் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.