'அறவழி' போராட்டம் தொடரும்: அன்புமணி ராமதாசு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி வன்னியர்கள் இருவரின் படுகொலைக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தச் சென்ற ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் காவல் துறையினர் கைது செய்தது அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழகத்தில் தடையை மீறி எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், அதற்காக எந்த தலைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்படவில்லை. மாறாக நீதி கேட்டு போராடியதற்காக ராமதாஸை தமிழக அரசு, பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குத் தொடர்ந்து, கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட மருத்துவர் அய்யாவை அருகில் உள்ள கடலூர் சிறையில் அடைக்காமல், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, இரவு முழுவதும் அலைக்கழித்து அதிகாலை 04.30 மணிக்குத் தான் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் வன்னியர் சங்கத் தலைவர் குரு கைது செய்யப்பட்டதும் அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். அவருக்கு எதிரான பொய் வழக்கு ஒன்றில் தலை மறைவாகி விட்டதாகக் கூறி, 10.04.2013 அன்று நீதிமன்றத்தில் பிடிஆணை பெற்று குரு கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு ஜெ.குரு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார்.
ஆனால், அப்போதெல்லாம் கைது செய்யாத காவல் துறையினர், இப்போது திடீரென சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு சென்று குருவை கைது செய்து உள்ளனர். ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான பா.ம.க. தொண்டர்களையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பாட்டாளிகள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகவும் ராமதாசின் பயணம் தொடரும்.
மரக்காணத்தில் வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் அப்பாவி வன்னிய இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டது, கலவரத்தில் பலரும், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 4 பேரும் படுகாயம் அடைந்தது ஆகியவற்றுக்கு நீதி கிடைப்பதற்காக சி.பி.ஐ விசாரணையும், நீதி விசாரணையும் நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். எங்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அறவழியில் எங்களின் போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்