ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்பரீஷ் அவமரியாதை: ரசிகர்கள் ஆத்திரம்
சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகாவில் 3வது கட்ட பிரச்சாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். மாண்டியா தொகுயில் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அம்பரீஷ் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் ராகுல் காந்தி கூட்டத்திற்கு வந்தார்.
சுமலதா மேடையின் பின் வரிசையில் அமர்ந்தார். மாண்டியா வேட்பாளர் என்பதால் அம்பரீஷ் ராகுல் காந்தி இருக்கை அருகே காலியாக இருந்த நாற்காலியில் உட்கார முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அம்பரீஷை பின் வரிசையில் சென்று உட்காருமாறு கூறினார்.
இதை அவமானமாக நினைத்த அவர் மசூதனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராகுல் காந்தி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தபோது நீயே பேசு என்று கோபமாக கூறிவிட்டு அம்பரீஷ் மேடையை விட்டு இறங்கி பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்தார். அதன் பிறகு தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்பரீஷை மேடையில் வந்து அமருமாறு கூறினார். ஆனால் அம்பரீஷ் மேடைக்கு வர மறுத்துவிட்டார்.
நான் மேடையில் இருந்தால் பிரச்சார செலவு வேட்பாளரான என் கணக்கில் சேரும். இப்போது அது கட்சி கணக்கில் சேரும். நீ என்னை அவமானப்படுத்தினாலும் எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய் என்று கூறி அவர் இறுதிவரை மேடையில் வந்து அமரவில்லை. ராகுல் கூட்டத்தில் அம்பரீஷ் அவமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.