சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி மே 15ம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்: திமுக
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சென்னையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 1860-ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்படாமல் இருந்த தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திரம் திட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வற்புறுத்துதலின் பேரில் 2005 ஜூலை 2-ந் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று தி.மு.க. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் வலியுறுத்தி வந்தது. இந்தியப் பிரதமர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு கருணாநிதி தொடர்ந்து கடிதம் வாயிலாகவும், நேரிலும் இத்திட்டம் குறித்து வலியுறுத்தி வந்திருக்கிறார். அண்ணா முதலமைச்சராக இருந்த நேரத்தில் 23-7-1967 அன்று சேது சமுத்திரம் திட்டம், அதன் ஒரு பிரிவாக தூத்துக்குடி துறைமுகத் திட்டம் மற்றும் சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றிடக் கோரி, தி.மு.க. சார்பில் எழுச்சி நாள் அறிவித்து, மத்திய அரசினை வலியுறுத்தினார்.
ஆனால், ஏறத்தாழ 2,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், சில பிற்போக்கு சக்திகளின் தூண்டுதல் காரணமாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இடைக்காலத் தடையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தங்களுடைய 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை'யில் மட்டுமன்றி, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் வலியுறுத்திய அ.தி.மு.க. தற்போது அந்தக் கோரிக்கைக்கு எதிராக மாறி, செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தை ஆளும் அரசு, இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் பெரிதும் துணை செய்யும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் மேலும் வளம் பெறும் என்பதை உணராமல், தமிழகத்தை ஆளும் அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாக மாறியிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஏறத்தாழ 50%க்கும் மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
மாவட்டத் தலைநகரங்களிலும், மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் வரும் 15-ந்தேதி நடைபெறும். கருணாநிதி வடசென்னையிலும், பொதுச்செயலாளர் (நான்) பேராசிரியர் அன்பழகன் கடலூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் கரூரிலும், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கோவையிலும் நடைபெறும் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.