ஆள் கடத்தல் வழக்கு: கோர்ட்டில் சரணடைய திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு உத்தரவு
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் கோஷ். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட சீட் வாங்கித்தர கேட்டு திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
ஆனால் சாத்தூர் ராமச்சந்திரன் சீட் வாங்கி தராததோடு பணத்தையும் திருப்பி தரவில்லை என கோஷ் அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென கோஷ் மாயமானார். அவரை கண்டுபிடித்து தரும்படி மதுரை உயர் நீதிமன்றத்தில் அவரது அண்ணன் மனைவி குருவம்மா மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் கோஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோஷ் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 14 ம் தேதி திமுக பிரமுகர்களான உதயசெழியன், மல்லி ஆறுமுகம் ஆகியோர் என்னை காரில் பெங்களூருக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து வழக்கை வாபஸ் பெறுமாறு அடித்து சித்ரவதை செய்தனர். பின்பு என்னை அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டனர்.
முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தூண்டுதலின் பெயரிலேயே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் சாத்தூர் ராமச்சந்திரன் உள்பட 3 பேர் மீது கிருஷ்ணன்கோவில் போலீசார் ஆள்கடத்தல், கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளோம். அது வரை தங்களை கைது செய்ய கூடாது என போலீசாருக்கு உத்தரவிடக் கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மகன் ரமேஷ், சகோதரர் சுப்புராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.கே. வாசுகி ராமச்சந்திரனை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார். மேலும் அங்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் ஆட்சேபம் இருப்பின் அதற்கான மனுவை அரசு தரப்பு தாக்கல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டார்.