தூத்துக்குடியில் சத்துணவுக்கூடம் இடிந்து விழுந்து ஊழியர் படுகாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சத்துணவுக்கூடம் இடிந்து விழுந்த விபத்தில் சத்துணவு மைய உதவியாளர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை யூனியனுக்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் சத்துணவு கூடம் பழுதான நிலையில் புதியதாக சத்துணவுக்கூடம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு கட்டிட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
அப்பகுதியை சேர்ந்த சத்துணவு மைய உதவியாளரான செல்வி சமையல் கூடத்தை சுத்தம் செய்ததுடன், அங்கிருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் எடுத்து வைத்தார். அப்பொழுது திடீரென புதிய கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து செல்வி மீது விழுந்தது.
இந்த விபத்தில் தலையில் பலத்தகாயம் அடைந்த செல்வியை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடம் இடிந்து விழுந்ததை அறிந்த கான்ட்ராக்டர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய கட்டிடம் தரமாக கட்டப்படவில்லை எனவே தற்போது கட்டியுள்ள கட்டித்தை இடித்து மீண்டும் புதிய கட்டிடத்தை தரமாக கட்டவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.