டாக்டர் ராமதாஸ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு... வெளியே வருவதில் சிக்கல்
மரக்காணம் கலவரத்தை கண்டித்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் கோ.க.மணி உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சட்ட விரோதமாக கூடுதல், கூட்டு சதி செய்தல், அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராமதாஸ் சார்பில் வழக்கறிஞர் துரைமுருகன், விழுப்புரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சிவகுமார் முன்பு இன்று நண்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
மேலும் இரண்டு வழக்கு
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதிநடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் காவல்துறை அனுமதித்த நேரத்தை விட அதிக நேரம் பேசியதாகவும், 2012ஆம் ஆண்டு அதே இடத்தில் நடந்த மற்றொரு சம்பவம் தொடர்பாகவும் ராமதாஸ் மீது திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் இன்று இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த இரண்டு வழக்குகளில் ராமதாஸ் கைது செய்யப்படலாம்.
நாளை ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், ஆர்ப்பாட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.