சரப்ஜித் சிங்: பாகிஸ்தான் சிறையில் 22 ஆண்டுகள்…. ஓர் இருண்ட பயணம்
மரண தண்டனை விதிக்கப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் கடந்த 22 ஆண்டுகளாக தவித்து வந்த இந்தியர் சரப்ஜித் சிங், இன்று அதிகாலை மரணமடைந்தார்.
பாகிஸ்தான் சிறையில் அடைபட்டு தாய்மண்ணை பார்க்காமலும், தன்னை பார்க்க வந்த உறவினர்களை அறிய முடியாத நிலையிலும் உயிரிழந்துள்ளார்.
யார் இந்த சரப்ஜித்சிங்? என்ன குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு கடைசியில் சக கைதிகள் அவரை அடித்துக் கொன்றனர்? என்பது இன்றைக்கு பலருடைய கேள்வியாக இருக்கிறது. 1990 முதல் 2013 வரை சரப்ஜித் சிங் சிறையில் கழித்த இருண்ட நாட்களை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
1990 ஆகஸ்டில் 28ல் கைது
இந்தியாவின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு,கடந்த 1990 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 9 மாதங்கள் கழித்து இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
தொடர் குண்டுவெடிப்பு
பின்னர், அந்நாட்டின் லாகூர் மற்றும் பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் அதன் தொடர்ச்சியாக 14 பேர் கொல்லப்பட்டதற்கும் சரப்ஜித் சிங் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
1991ல் மரணதண்டனை
இந்த குற்றங்களுக்காக அவருக்கு 1991ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கான தண்டனையை உறுதி செய்தது.
உச்சநீதிமன்றம் உறுதி
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சரப்ஜித் சிங். ஆனால் 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
கருணை மனு தள்ளுபடி
பர்வேஸ் முஷாரஃப் அதிபராக இருந்த போது சரப்ஜித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு 2008 ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.எனினும், அவருக்கு கருணை வழங்க வேண்டும் என சரப்ஜித் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கையெழுத்து இயக்கம்
இங்கிலந்து வழக்கறிஞர் ஒருவர், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பின்னர் 2009ம் ஆண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.
மீண்டும் கருணை மனு
பின்னர் அதிபர் அசிஃப் அலி சர்தாரியிடம் கடந்த ஆண்டு மே மாதம் சரப்ஜித் சிங் கருணை மனுத்தாக்கல் செய்தார். ஜூன் 2012ல், அந்த மனு மீதான விசாரணைக்குப் பின்னர், அவருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
பல்டி அடித்த பாகிஸ்தான்
ஆனால், ஒரு சில தினங்களுக்குப் பின்னர், சரப்ஜித் சிங்கிற்கு பதிலாக மற்றொரு இந்திய கைதியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு கருணை மனுவை, ஆசிஃப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் தாக்கல் செய்தார்.
சிறையில் தாக்குதல்
சிறைக்குள் இருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த மாதம் 26ம் தேதி, பயங்கரமாக தாக்கினர். இதில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.
6 நாள் போராட்டம்
கோமா நிலையிலேயே 6 நாட்கள் உயிருக்குப் போராடிய இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
22 ஆண்டுகள் மரண வாழ்க்கை
சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்பார்கள். மரணதண்டனை விதிக்கப்பட்டு தினம் தினம் மரணத்தை எதிர்நோக்கியிருந்த சரப்ஜித் சிங் கடைசியில் சக கைதிகளினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.