சரப்ஜித்சிங் உடலை 'வெற்றிகரமாக' கொண்டு வந்துட்டோம்: பெருமிதப்படும் திக்விஜய்சிங்!
எல்லையில் சீனாவின் ஊடுருவல், பாகிஸ்தானில் சரப்ஜித்சிங் படுகொலை என இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சரப்ஜித் சிங் கொலைக்கு எதற்காக நடந்தது? கொலை செய்தவர்கள் யார்? என்ற எந்த ஒரு உண்மையும் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
அதே நேரத்தில் சரப்ஜித்சிங் உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்ததே 'மிகப் பெரிய வெற்றி'யாக கருதுகிறது காங்கிரஸ். அக் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில் இப்படித்தான் கொண்டாடி இருக்கிறார் சரப்ஜித் சிங் உடலை முன்வைத்து... " சரப்ஜித் சிங் உடலை வெற்றிகரமாக கொண்டு வந்துவிட்டோம்" என்று... இதற்கு என்ன பதில் சொல்வது?
ஒருநாட்டின் ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்துப் போன ஒரு எதிரி நாட்டு பிரதமருடன் வெட்கமே இல்லாமல் மதிய விருந்து சாப்பிடும் இந்த தேசபக்தி திலகங்கள் ஒரு சடலத்தைக் கொண்டு வந்ததே பெரிய வீரமாக பேசிக் கொண்டிருக்கும் மனோபாவத்தை என்னவென்று சொல்வது? இவர்கள் கூடி விவாதித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசத்தின் வெளியுறவுக் கொள்கையை என்னவென்று சொல்வது?
இதனிடையே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து கோலோச்சிக் கொண்டிருக்கின்றன வீனா மாலிக் உள்ளிட்ட அனைத்து பாகிஸ்தானிய நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதுசரி 'உடலை' கொண்டு வந்ததே வெளியுறவுக் கொள்கையின் வீரமாக கருதுகிறவர்களுக்கு இந்த கண்ணீர் குரல் காதில் விழத்தான் போகிறதா?