ரூ.25 கோடி தந்தால் சரப்ஜித்தை காப்பாற்றுவதாக கூறிய பாக். மனித உரிமை ஆர்வலர்: சகோதரி புகார்
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட இருக்கிறது. சிறையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் சகோதரி, பாகிஸ்தான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் கூறியதாவது:-
பாகிஸ்தான் ஒரு கோழை. அந்நாட்டிற்கு எதிராக ஒரு போர் நடத்த வேண்டிய நேரம் இது. எனது சகோதரர் சரப்ஜித் சிங் இப்போது தியாகியாகிவிட்டார். ஏனென்றால், அவர் இந்தியர் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டன. இன்று அவரை பாகிஸ்தானில் தேர்தலுக்காக சர்தாரி கொலை செய்திருக்கிறார். இதற்கு முன்பு பிரதமராக இருந்த வாஜ்பாயை அவர்கள் முதுகில் குத்தினார்கள், இன்று மன்மோகன் சிங்கை குத்தியிருக்கிறர்கள்.
எனவே, அனைத்து அரசியல்கட்சிகளும் பிரதமர் மன்மோகன் சிங், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அன்சார் புர்னே என்பவர், சரப்ஜித் சிங்கிற்கு உதவி செய்வதற்கு ரூ.25 கோடி கேட்டார். நான் அவருக்கு ரூ.25 கோடி கொடுத்திருந்தால், சரப்ஜித் சிங் இந்தியாவுக்கு வந்திருப்பார். நான் ஏழை என்பதால் அந்த தொகையை அவருக்கு கொடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் 2 கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று என்னிடம் புர்னே கூறினார்.
பணத்தை காலையில் கொடுத்தால் மாலையில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். சரப்ஜித் மரணத்தையடுத்து, பாகிஸ்தானில் இருந்து இங்கு வருபவர்களுக்கான விசாக்களை உள்துறை மந்திரி ஷிண்டே, ரத்து செய்ய வேண்டும். சரப்ஜித் மரணம் தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்படும் என்றும், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
சரப்ஜித் சிங்கின் உடலுக்கு எங்கள் சொந்த ஊரான பிக்கிவிண்ட் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும். எனது சகோதரரை பறிகொடுத்திருந்தாலும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய கைதிகளுக்காக போராடுவேன். இந்திய கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' ,என இவ்வாறு அவர் கூறினார்.