சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்ட சரப்ஜித் சிங் உடல்!
அமிர்தசரஸ்: பாகிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரப்ஜித் சிங் உடல் நேற்று மாலை இந்தியாவுக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் மீது கடந்த 26-ந் தேதி சக கைதிகள் கொடூர கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். இதில் மூளைச் சாவடைந்த சரப்ஜித்சிங் உயிரிழந்துவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடல் லாகூரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு நேற்று மாலை சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.
சரப்ஜித் உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ராஜசன்சி விமான நிலையத்துக்கு பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல், அமைச்சர்கள், மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் ப்ரநீத் கௌர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் அவரது சொந்த கிராமமான பிகிவிண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பஞ்சாப் மாநில அரசு சரப்ஜித் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி அறிவித்ததுடன் மூன்று நாள் அரசு முறைத் துக்கம் அனுஷ்டிக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை அடுத்து அரசு அலுவலகக் கட்டடங்களில் அரைக் கம்பத்தில் கொடி பறக்கவிடப்படும். ஏற்கெனவே சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு மத்திய அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.