சரப்ஜித் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்- ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி!
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட சரப்ஜித் சிங்கின் உடல் இன்று பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், அந்நாட்டு சிறைக் கைதிகளின் கொடுந்தாக்குதலுக்குள்ளாகினர். பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் நேற்று மாலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
முக்கிய உறுப்புகள் இல்லை
பொதுவாக பிரேத பரிசோதனை செய்யப்படும் போது இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் அகற்றப்படும். ஆனால் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் போது மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிந்தும் அந்த முக்கிய உறுப்புகள் வைக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் சரப்ஜித் சிங்கின் சொந்த ஊரான பிகிவிண்டுவுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
முக்கிய தலைவர்கள் அஞ்சலி- தகனம்
பிகிவிண்டு பள்ளிக்கூட மைதானத்தில் சரப்ஜித் சிங்கின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்தனர். பின்னர் பொதுமக்கள் சரப்ஜித் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரநீத் கெளர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர்பாதல், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கெனவே 3 நாள் அரசு துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரப்ஜித்சிங்கின் சொந்த ஊரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஊர்வலங்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடி மற்றும் தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.