சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை.. தமிழகம் புரிந்து கொள்ள வேண்டாமா?: கருணாநிதி
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களின் எத்தனை ஆண்டு காலக் கனவு? 150 ஆண்டுக் காலமாக தமிழ் மக்கள் கண்ட கனவு தான் சேது சமுத்திரத் திட்டம். பேரறிஞர் அண்ணா சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆட்சியிலே இருந்த போதே "எழுச்சி நாள்" கடைப்பிடித்தார்.
தி.மு. கழகம் மாத்திரமல்ல; அ.தி.மு.கவும் 2001ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், 2004ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று கோரிக்கை வைத்ததை மக்கள் மறந்து விடவில்லை. மத்தியிலே அமைகின்ற ஆட்சியிடம் சேது திட்டத்தை வலியுறுத்திக் கேட்டுப் பெறுவோம் என்றார்கள். அவர்களே தற்போது சேது சமுத்திரத் திட்டம் வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்திலே 29-4-2013 அன்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். ஏன்?.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதே 10-5-1986 அன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டப் பணிகளின் துவக்க விழா 2005ம் ஆண்டு ஜூலை 2ம் நாள் மதுரை மாநகரமே குலுங்குகின்ற வண்ணம் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டிருந்து நடத்திய காட்சிதான் தற்போது என் கண்ணுக்குத் தெரிகிறது.
அந்தத் தொடக்க விழாவினையே தடுத்து நிறுத்திட வேண்டுமென்று அப்போது சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக் கொடுத்தார்கள்.
அது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெஞ்ச், "தேசிய நலனுக்காகக் கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் நாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடாக் கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். இந்தக் கால்வாய் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்குத் தடை கிடையாது" என்று கூறி தீர்ப்பளித்தது.
இவ்வளவையும் மீறி மக்களின் வரிப்பணம் 829 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காகச் செலவிட்ட பிறகு தற்போது மதம் சம்மந்தமான காரணங்களைத் தெரிவித்து எப்படியாவது இந்தத் திட்டத்திற்கு மூடு விழா செய்திட நினைப்பதைத் தமிழகம் புரிந்து கொள்ள வேண்டாமா? இந்தத் திட்டத்தினால் தென் தமிழகம் பெரும் பயன்பெறும், குறிப்பாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்த பிறகும், இந்தத் திட்டம் வரக் கூடாது என்று நினைப்பது முறைதானா?
மாநிலத்திலே ஆட்சியிலே இருப்போர், இதுபோன்ற திட்டங்களை எப்படியாவது பெற்று, அதனை நிறைவேற்றி மாநில மக்கள் பயன்பெற நினைப்பார்களே தவிர, மிகுந்த முயற்சியெடுத்துப் பெற்ற திட்டம் தேவையில்லை என்று அரசின் சார்பிலேயே நீதிமன்றத்திற்குச் சென்று தெரிவிப்பார்களா?
தமிழ்நாட்டு மக்களுக்கு இதையெல்லாம் புரிய வைக்க வேண்டிய கடப்பாடு தி.மு.கழகத்திற்கு உண்டு. அதை நிறைவேற்றுவதற்காகத்தான் தலைமைக் கழகத்தின் சார்பில் 15-5-2013 அன்று தமிழகமெங்கும் சேது சமுத்திரத் திட்டம் தொடரப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி "எழுச்சி நாள்" கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எப்போதும்போல, இந்தக் கூட்டங்களையும் திமுகவினர் சிறப்பாக நடத்திட வேண்டுமென்று சேது சமுத்திரத் திட்டத்திற்காகப் பெரிதும் பாடுபட்டவர்களில் ஒருவன் என்ற முறையில் உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மத்திய அரசிடம் குரல் கொடுக்க வேண்டும்-கி.வீரமணி:
இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் வாய்ப்பாக அமையும், தமிழர்களின் நீண்ட கால கனவு திட்டமான ‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்' என்ற திட்டத்தினை வேண்டாத தமிழ்நாட்டு தலைவர்களே இல்லை என்றே சொல்லலாம்.
தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை 2004ல் அமைத்த வாய்ப்பின் காரணமாக, 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 2007ல் துவக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இடையறாத திட்டமிட்ட சீரிய முயற்சி- தி.மு.கவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு கப்பல்துறை அமைச்சராகவே பொறுப்பேற்று மிக வேகமாகச் செய்ய முனைந்த இன்னும் ஒரு சிறு பகுதிதான் (22 கி.மீட்டர்தான்) முடிக்க வேண்டிய பாக்கி பகுதி என்ற நிலை இருந்தது.
இந்தக் கால கட்டத்தில் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டனர்.
தி.மு.க. வரும் மே 15ம் தேதி எழுச்சி நாள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, மக்களின் ஆதரவைத் திரட்டுவது என்பது வரவேற்கத்தக்கது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டு வளர்ச்சியோடு இணைந்த இன்றியமையாத திட்டம்.
எனவே இதனை மத்திய அரசு செயல்படுத்திட அனைவரும் ஒத்தக் கருத்துள்ளவர்கள். ஓரணியில் நிற்க மனமில்லா விட்டாலும் முரண்பாடு இல்லாமல் தனித்தனியாக வேனும் குரல் கொடுக்க செயல்படுத்த முன் வாருங்கள் என்று கூறியுள்ளார்.