சீர்காழியில் பாமகவினர் என்று நினைத்து திமுகவினரை கைது செய்த போலீசார்
நாகை: சீர்காழியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினருக்கு பதில் திமுகவினர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாமகவினரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சீர்காழி மேலமாரியம்மன் கோவிலைச் சேர்ந்த ஐயப்பன், கணபதி, ராமு ஆகிய 3 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் பாமக கிடையாது மாறாக திமுகவைச் சேர்ந்தவர்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திமுக நகர செயலாளர் சுப்புராயன் மற்றும் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று காலை சீர்காழி காவல் நிலையத்திற்கு சென்றனர். பாமகவினருக்கு பதிலாக திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் தங்கள் தவறை உணர்ந்து அந்த 3 பேரையும் விடுவித்தனர்.