ராமநாதபுரத்தில் போலி விசா தயார் செய்த இருவர் கைது!: லேப்டாப் பறிமுதல்
ராமநாதபுரம்: ஜெர்மனி செல்வதற்காக போலி விசா தயார் செய்த இருவரை ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன், பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரத்தை சார்ந்த ஜெயராமன் (28). ராஜ்குமார் (37) ஆகியோர் ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்களை ஜெர்மனிக்கு அனுப்புவதாக கூறி, அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூயாய் வரை வசூல் செய்துள்ளனர்.
அவர்கள் கூறியபடி, ஜெர்மனிக்கு யாரையும் அனுப்பவில்லை. மேலும், வசூல் செய்த பணத்தையும் பல மாதங்கள் ஆன பின்பும் திருப்பித்தரவில்லை.
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்ப போலி விசா மூலம் அனுப்ப முடிவு செய்து, அதற்காக, போலி விசா தயாரிக்கப்படுவதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, க்யூ பிரிவு போலீசார் ராமநாதபுரம் ரோஸ் நகரில் உள்ள ராஜ்குமார் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, 71 பாஸ்போர்ட்டுகள், 2 லேப் டாப், மொபைல் போன் மற்றும் 11லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் ஜெயராமனை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.