தே.பா. சட்டத்தின் கீழ் ராமதாஸ், காடுவெட்டி குருவை கைது செய்யக் கோரி மனு!நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்த
மதுரை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இல. மெய்யப்பன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது தவறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் வகையில் ராமதாஸ் தொடர்ந்து பேசி வருகிறார். காதலித்து திருமணம் செய்வது என்பது தமிழர் கலாசாரத்தில் பண்டைய காலத்தில் இருந்து வரும் ஒன்றாகும். ஆனால் ராமதாஸ், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆதிக்க ஜாதி பெண்களை காதலித்து திருமணம் செய்வதை நாடகத் திருமணம் என்றும், பணம் பறிக்க நடத்தும் திருமணங்கள் என்றும் பேசிவருவது, தாழ்த்தப்பட்ட மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. மேலும், பாமக நிர்வாகி காடுவெட்டிகுரு மூலம் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி வருகிறார். எனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வன்முறையைத் தூண்டுவதால் டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகிய இருவரையும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு 2004 டிசம்பர் 24-இல், மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்.ஆனால், இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன், மனுதாரரின் புகாரை பரிசீலித்து அடிப்படை முகாந்திரம் இருந்தால், தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், தல்லாகுளம் போலீஸார் இதில் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் அணுகி நடவடிக்கை கோரலாம் என உத்தரவிட்டார்.