சஜ்ஜான் குமார் விவகாரம்: பிதரமர் வீடு நோக்கி பேரணி கிளம்பிய சீக்கியர்கள், தடுத்து நிறுத்திய போலீசார்
1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜான் குமார் அண்மையில் விடுவிக்கப்பட்டார். இதற்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதே காரணத்திற்காக சீக்கியர்கள் இன்று டெல்லியில் கூடி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடு நோக்கி பேரணியாக கிளம்பினர்.
ஜந்தர் மந்தரில் இருந்து கிளம்பிய பேரணி நாடாளுமன்ற வீதியை அடைந்தபோது அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இது தவிர பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். மேலும் சஜ்ஜான் குமார் விடுவிக்கப்பட்டதை கண்டித்து பஞ்சாபில் ரயில் மறியல் நடந்ததால் பல மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீக்கிய கலவர வழக்கில் இருந்து சஜ்ஜான் குமார் கடந்த 1ம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லியில் சீக்கியர்கள் பெரிய அளவில் போராடி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சோனியாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த போராட்டம் நடந்தபோது சோனியா கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
1984ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் வசித்த சீக்கியர்களுக்கு எதிராக ஒரு கும்பலை தூண்டிவிட்டது மற்றும் கொலை குற்றம் ஆகிய குற்றங்கள் சஜ்ஜான் குமார் மீது சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.