தமிழரசி வீட்டுக் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை
சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து மொத்தம் 145 பவுன் நகைகளையும், பல லட்சம் பணத்தையும் திருடர்கள் அபகரித்துச் சென்ற செயல் மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.
சீர்காழியில் உள்ள தென்பாதி பகுதியில் வசித்து வருபவர் தமிழரசி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் அங்கிருந்த 100 பவுன் நகைகளையும், ரூ. 1.45 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இன்று காலைதான் இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல் தெரிய வந்தது. போலீஸார் இந்த துணிகர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல என்ஜிஓ காலனியில் வசித்து வருபவர் பொறியாளர் சுரேஷ். இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 42 ஆயிரம் பணத்தை அள்ளிச் சென்றது.
நேரு நகரில் வசித்து வரும் ஒரு ஜோதிடர் வீட்டையும் திருடர்கள் விடவில்லை. வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்த 30 பவுன் நகைகளையும், ரூ. 90 ஆயிரம் பணமும் திருடிச் சென்றனர்.
சீர்காழியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடர்கள் பல நூறு பவுன் நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.